Wednesday, December 25, 2013

என் ஊரை காணவில்லை...

நான்கு திசையும் வயல்கள்
நாலாபுற‌மும் குளங்கள்
ஊர் மத்தியில் அம்மன்
ஆலயம் எல்லை புறத்தில்
வீர‌ பத்திரர்
பைரவர்
அய்யனார் ஊரை காக்கும்
கடவுள்களாய்.....!!!
சிறு படகுடன் நிறைந்த‌
கடற்கரை தொலைதூரத்தில்
உடைந்த‌ கட்டுமரங்களும்
ஆங்காங்கே சிதறிகிடக்கும்
வரையறுக்கப்பட்ட‌ குடிசைகள்
கிராமிய‌ பண்பாட்டை
மாற்றாத‌ வாழ்க்கை முறை....!!!
மாலை நேரத்தில் ஆலமரத்தடி
அறிவு தாத்தாக்களின் மன்றம்
மழைக்கு கூட‌ பாடசாலை
பக்கம் ஒதுங்காதவர்கள்
புராணக்கதையிலும்
உலக‌ நடப்பிலும்
படிக்காதமேதைகள்.......!!!
பச்சை மரமொன்றில்
பழங்கள் எதுமில்லை
கறுப்பாய் ஒரு கனி
அதன் பெயர் தேன் கூடு
அதற்கு ஒரு கல்லால் எறிந்து
தேனிகலைக்கும்போது
தலை தெரிக்க‌ ஓடும் சிறார்கள்....!!!
இத்தனையும் அனுபவித்து சுவைத்த‌
அற்புத‌ மனிதன் நான்
காலம் கடந்து என் பிள்ளையுடன்
என் ஊருக்கு போனேன் கனவுகளுடன்
அம்மன் கோயில் இராஜ‌ கோபுரத்தை
காணவில்லை ‍சிறு கூடாரத்துக்குள்
முடங்கி இருந்தால் என் தாய்
காவல் தெய்வங்கள் இருந்த‌
கால‌ சுவடியை கூட‌ காணவில்லை ......!!!
என் கனவு மட்டும்
தவுடு பொடியாகவில்லை
என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது
ஆலமரம் கூட‌ அங்கவீனமாய்
கிளைகள் உடைந்த்த‌ நிலையில்
வீடுகள் எல்லாம் துப்பாக்கி
துளையால் அரிதட்டானது
ஓடி விலையாடிய‌ வயலுக்குள்
இறங்க‌ விரும்பினேன் அருகில்
ஒரு பலகை ..கவனம்
வெடிக்கும் இறங்காதீர் இறங்காதீர்....!!!
என் ஊரை காணவில்லை
என் உறவுகளை காணவில்லை
ஓடி விளையாடிய‌ என் நண்பர்களை
ஓரிரு இடங்களில் புகைப்படத்தில் பார்த்தேன்
இது கவிதை இல்லை நான் நேரில்
கண்ட‌ அனுபவித்த‌ துன்பங்கள்
தூரத்தில் என் பழைய‌ நண்பன்
ஓடி வந்து கட்டிப்பிடித்தான்
முடியவில்லை அவனால்
ஒரு கை இல்லை .......!!!

என் மழைத் தோழியுடன்..!!!

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசியமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடியிலே..!!!
நொடியில் துயில் கலைத்து
புறப்பட்டாள்
கொஞ்சம் ஓய்வெடு என்றேன்..!!!
ஓய்வா ..?? எனக்கா..??
நான்
வீட்டிலே அடைந்து கிடக்க
பூலோக கன்னியுமல்ல
படிக்கையிலே படுத்து கிடக்க
பொறுப்பில்லா பாலகனுமல்ல
படி தாண்டி வா என்னோடு
கடமைகள்
மலையாய் குவிந்துள்ளதென்று
கனத்த குரலில்
கன்னத்தில் அறைந்தாள் ..!!!
புறப்பட்டேன் அவளோடு...
வழியில் நின்ற தடைகளை
உளியின்றி உடைத்து
தன்னோடு கட்டியிழுத்து
சீறிப் பாய்ந்தோடினாள்..!!!
மனித கிருமிகளால்
தாவரங்களுக்கு இரத்தசோகை
வேர்களில் ரத்தமாய் பாய்ந்து
நோய் தீர்த்தாள்...!!!
வெட்டிய மரத்தின்
உயிரில்லா விதைகளுக்கு
தன்னை மண்ணில் மரித்து
உயிர் கொடுத்தாள் ...!!!
குளம் குட்டைகளில் நிரம்பி
பாலையான விவசாயின்
கண்களை சோலையாக்கினாள்...!!!
கட்டியிழுத்து வந்ததை
தங்க துகளாக்கி
கரையெங்கும் தூவி
கடல் அன்னையோடு கலந்தாள்..!!!
கடமை முடியவில்லை
மேக கன்னிகளோடு
மீண்டும் வருவேனென்று
பருதியின் பார்வையிலே
உடன்கட்டை ஏறி
ஆவியாகி பறந்தாள்..!!!
கடற்கரையில் தனி மரமாய்
நின்றிருந்தேன்
தோழியவளின் வருகைக்காக..!!
-------சுதா--------

Wednesday, August 7, 2013

ஏன் தேவை மார்க்சியம்?


இன்று வரையிலும் மார்க்சியம் உலகில் செலுத்திவரும் தாக்கத்தை உணரவேண்டுமானால் லண்டனில் உள்ள ‘ஹைகேட் கல்லறைக்குச் செல்லுங்கள்.’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ‘19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ், ஹெர்பர்ட் ஸ்பென்சர் இருவரும் அருகருகே இங்கே புதைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், ஹெர்பர்ட் வாழும் அரிஸ்டாட்டிலாக மதிப்பிடப்பட்டார். மாறாக, ஹாம்ப்ஸ்டெட் கீழ்ப்பகுதியில் தன் நண்பரின் பணத்தில் உயிர் வாழும் நபராக கார்ல் மதிப்பிடப்பட்டார். இன்றோ ஸ்பென்சர் இங்கே இருக்கிறார் என்பதே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் இந்தியாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும்கூட பார்வையாளர்கள் கார்ல் மார்க்ஸின் கல்லறையைத் தரிசிக்கிறார்கள்.’
வலிமையானது மட்டுமே பிழைத்திருக்கும் என்னும் புகழ்பெற்ற பதத்தை அறிமுகப்படுத்தியவர் ஹெர்பர்ட் ஸ்பென்சர். அறவியல், மதம், மானுடவியல், தத்துவம், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார் ஸ்பென்சர். ஐரோப்பாவின் ஒரே தனிப்பெரும் சிந்தனையாளர் என்று பெருமிதத்துடன் அவர் அழைக்கப்பட்டார். ஆனால் 1900க்குப் பிறகு ஐரேப்பா ஸ்பென்சரைக் கடந்து சென்றது. தொடக்க காலத்தில் ஸ்பென்சருக்குக் கிடைத்த புகழ் அவர் மரணம் வரைகூட நீடிக்கவில்லை. ஸ்பென்சரை இன்று ஒருவரும் நினைவுகூர்வதில்லை.
ஸ்பென்சரைப் போலவே மார்க்ஸும் அறவியல், மதம், மானுடவியல், தத்துவம், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கியிருக்கிறார். ஸ்பென்சரைப் போலன்றி மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் எழுத்துகள் விரிவாக வாசிக்கப்படவில்லை. ஸ்பென்சருக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் ஒரு பங்குக்கூட மார்க்ஸுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ‘இறப்புக்குப் பிறகு மார்க்ஸுக்குக் கிடைத்த புகழ் சாதாரணமானதா என்ன?’ என்று வியக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.
மார்க்ஸ் இறந்து இருபத்தைந்து ஆண்டுகளில், ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக அவர் பெயரில் கட்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 1918ம் ஆண்டுக்குப் பிறகு மார்க்ஸின் பெயரைச் சூட்டிக்கொண்ட கட்சிகள் ஆட்சியில் அமரத் தொடங்கின. ஜனநாயகம் இல்லாத நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் மார்க்சியம் பயின்ற மாணவர்கள் புரட்சிகரப் படைகளை அமைக்கத் தொடங்கினர். ‘மார்க்ஸ் மறைந்து எழுபதத்தைந்து ஆண்டுகளுக்குள் உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியில் கீழ் திரண்டுவிட்டனர்.’
இன்றுவரை உலகம் முழுவதிலும் அவர் படைப்புகள் பெரும் பகுதியினரிடையே அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வரலாற்றாசிரியர்கள், சமூக அறிஞர்கள், தத்துவஞானிகள், அரசியல் நிபுணர்கள் என்று பலரும் மார்க்சியத்தின் துணை கொண்டு உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இன்னொரு பிரிவினர் நடைமுறையில் மார்க்சியத்தைக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மார்க்ஸே முதல் பெரும் சிந்தனையாளர் என்று கருத்து கணிப்பு நடத்தி அறிவித்த பிபிசியை ‘நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்கிறார் ஹாப்ஸ்பாம். மாறாக, ‘இன்று கூகிளில் மார்க்ஸ் பெயரைத் தட்டச்சு செய்து பாருங்கள். டார்வின், ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மார்க்ஸே மிகப்பெரிய அறிவுத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தெரியவரும். நிச்சயம், ஆடம் ஸ்மித், ஃபிராய்ட் இருவரையும்விட அதிகமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.’
ஆனால், உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் தாய் நாடாகக் கருதப்பட்டு வந்த சோவியத் யூனியன் தகர்ந்துவிட்ட நிலையில், புரட்சியின்மூலம் நிறுவப்பட்ட செஞ்சீனம் சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவி நிற்கும் தருணத்தில் மார்க்சியத்தில் இருந்து நாம் எத்தகைய நம்பிக்கையை பெறுவது?
ஹாப்ஸ்பாம் இந்தக் கேள்வியை வேறு கோணத்தில் இருந்து அணுகுகிறார். முதலில் சோவியத் யூனியனையும் மார்க்சியத்தையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்கிறார் ஹாப்ஸ்பாம். சோவியத்தில் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட மார்க்சியம் தோல்வியடைந்ததன் காரணமாக, மார்க்சியத்துக்கும் லெனினியத்துக்குமான தொடர்பு அறுபட்டது. இது ஒரு வகையில் நல்லதுதான் என்கிறார் அவர். மார்க்சியத்தை சோவியத் பரிசோதனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவது தவறு. ஹாப்ஸ்பாமின் இந்த வாதத்தை இன்னும் நீட்டித்தால் மார்க்சியத்தின் வெற்றி, தோல்விக்கும் சோவியத், சீனா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றின் வெற்றி, தோல்விக்கும் தொடர்பில்லை என்பது புரியவரும்.
லெனின், மாவோ போன்றவர்கள் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் தத்துவத்தை தங்கள் மண்ணுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியவர்கள். மார்க்சியத்தை முனைப்புடன் செழுமைப்படுத்தியவர்கள். அவர்களுடைய பரிசோதனைகள் மார்க்சியத்தை எந்தவகையிலும் பாதிக்காது. இவ்வாறு சொல்வதை சோவியத் மற்றும் செஞ் சீனத்தின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளமுடியாது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியை ஏன் மார்க்சியத்தின் வீழ்ச்சியாகக் கொள்ளமுடியாது என்பதற்கு ஹாப்ஸ்பாம் சில உதாரணங்கள் அளிக்கிறார். ஒரு முறை யுனைட்டெட் ஏர்லைன்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் எரிக் ஹாப்ஸ்பாமை அணுகி ஒரு கட்டுரை எழுதிக்கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். ஹாப்ஸ்பாம் திகைத்துப்போனார். விமானப் பயணிகளுக்கான ஒரு பிரத்தியேக இதழில் எழுதுமாறு எதற்காக ஒரு மார்க்சிஸ்டை அவர்கள் அணுகவேண்டும்? இத்தனைக்கும் அவர்களுடைய பயணிகளில் எண்பது சதவிகிதம் பேர் அமெரிக்கர்கள். ஓர் இடதுசாரியை வாசிக்க அவர்கள் விரும்புவார்களா என்ன? குழப்பங்கள் இருந்தபோதும், அழைப்பை மறுக்காமல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறித்து ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தார் ஹாப்ஸ்பாம்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், கம்யூனிசத்தை அடி முதல் முடி வரை வெறுத்த ஒரு எழுத்தாளர் ஹாப்ஸ்பாமை அணுகி, ‘மார்க்ஸைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது மீண்டும் அவர் திகைத்துப்போனார். நான் என்ன சொல்வேன் என்று தெரிந்தும் என்னிடம் வந்து மார்க்ஸைப் பற்றி இவர் ஏன் விசாரிக்கவேண்டும்?எதற்காக திடீரென்று முதலாளிகளும் முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் மார்க்ஸ் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்? எதற்காக மார்க்ஸ்மீது அவர்களுக்கு இந்தத் திடீர் ஆர்வம்?
சோவியத் யூனியனின் கதை முடிந்துவிட்டது, மார்க்சியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் எழுதி சலித்துவிட்ட பிறகு எதற்காக மீண்டும் மார்க்ஸை இவர்கள் இழுக்கிறார்கள்? தன்னை அணுகிய நண்பரிடம் இதே கேள்வியை ஹாப்ஸ்பாம் வீசியபோது அவர் இப்படிப் பதிலளித்திருக்கிறார். ‘ஓ அந்த மனிதன், 150 ஆண்டுகளுக்கு முன்பே முதலாளித்துவம் குறித்து சிந்தித்திருக்கிறாராமே! அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று கவனிக்கவேண்டும் அல்லவா?’ராய்டர்ஸ் செய்திக்குறிப்பின்படி 2008ல் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் கிழக்கு ஜெர்மனியில் 52 சதவிகிதிம் பேர் சுதந்தரச் சந்தையால் தங்களுக்குப் பலனில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். 43 சதவிகிதம் பேர் சோஷலிசம் மீண்டும் வேண்டும் என்கிறார்கள். ஜெர்மானிய வங்கி ஒன்று (Sparkasse) தனது மாஸ்டர் கார்ட் கடன் அட்டையில் யாருடைய படத்தைப் பொறிக்கலாம் என்று தங்கள் வாடிக்கையாளர்களைக் கேட்டபோது பெரும்பாலானவர்கள் கார்ல் மார்க்ஸின் பெயரை முன்மொழிந்தனர். இறுதியில் அவருடைய படமே அட்டையில் இடம்பெற்றது.
மார்க்சியம் பரவிய நாடுகளை மட்டுமல்ல மார்க்சியம் பரவாத நாடுகளையும்கூட நாம் ஆய்வு செய்யவேண்டும். அங்கே ஏன் மார்க்சியம் நுழையவில்லை என்னும் கேள்வியை எழுப்பவேண்டும் என்கிறார் The Marxists என்னும் நூலின் ஆசிரியர் சி. ரைட் மில்ஸ்.
மார்க்சியக் கோட்பாடு மகத்தான ஆற்றல் கொண்டது. ஏனெனில் அது உண்மையானது என்கிறார் லெனின். ‘நீ ஏழையாக இருப்பதற்கு நீ காரணமல்ல. நீ ஏழையாக நீடிக்கவேண்டிய அவசியமும் இல்லை.’ என்று எடுத்துச் சொன்னதோடு நில்லாமல் அந்த நிலையை மாற்றுவதற்கான வழியையும் சொல்லிக்கொடுக்கிறது மார்க்சியம். ‘முதலாளித்துவம் நீடிக்கும்வரை உன்மீதான சுரண்டல் ஒழியாது. முதலாளித்துவம் என்பது முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அது பாதிக்கிறது. உன்னை ஏழையாக மாற்றிவைத்திருக்கும் இந்த சமுதாய முறையை உன்னால் மாற்றிமைக்கமுடியும். உன்னை அடியில் போட்டு வைத்து ஆதிக்கம் செலுத்துபவர்களின் அதிகாரம் ஒருநாள் தகர்ந்துபோகும். அதற்கான அடியை நீ எடுத்துவைக்கப்போகிறாய். மனிதன்மீது மனிதன் செலுத்தும் அடுக்குமுறையை அழிக்க நீ புரட்சிக்குத் தயாராகவேண்டும்.’
முதலாளித்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக்கொள்கிறது என்கிறது உலகில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது புத்தகமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (முதலாவதுபைபிள்). அமெரிக்காவில் இன்று முதலாளித்துவம் உயிர்த்திருப்பதற்கு சீனாவின் வங்கிகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சுரண்டல் இல்லாமல் செல்வம் வளர்வதில்லை. இன்று ஒரு பிரிவினர் ஐ பாட், ஐ ஃபோன் யுகத்துக்கு முன்னேறியிருப்பதற்கு விலை கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் சீனத் தொழிலாளர்கள்.
பொருளாதார நெருக்கடியின்போது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பிணையில் மீட்டெடுத்தவர்கள் தொழிலாளர்கள்தாம். ஆனால் வேலை பறிபோன பணியாளர்களைப் பிணையில் மீட்க யாருமில்லை. அப்பட்டமாக கண்முன்னால் அரசும் முதலாளித்துவமும் கூட்டணி அமைத்துக்கொண்டு செயல்படுவதைக் கண்ட தொழிலாளர் வர்க்கம் தவிர்க்கவியலாதபடி மார்க்சியத்தின் பக்கம் திரும்புகிறது. மார்க்ஸின் மூலதனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகிய நூல்களின் விற்பனை குறிப்பாக 2008 தொடங்கி அதிகரித்திருக்கிறது என்னும் தி கார்டியனின் செய்திக்குறிப்பை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?
மார்க்சியம் தொழிலாளி வர்க்கத்துக்குத் தேவை. காரணம் அது நேரடியாக அவர்களுடன் உரையாடுகிறது. 21ம் நூற்றாண்டில் முதலாளிகளுக்கும் மார்க்சியம் தேவைப்படுகிறது. காரணம் முதலாளித்துவம் எப்படி வளர்கிறது, எப்படி செல்வம் சேர்க்கிறது என்பதை மட்டுமல்ல எப்படி, ஏன் தடுமாறுகிறது, எப்படி வீழ்ச்சியடைகிறது என்பதையும் சேர்த்தே மார்க்ஸ் அலசியிருக்கிறார்.
ஆனால் கார்ல் மார்க்ஸ் இன்று நமக்குத் தேவைப்படுவதற்கு இவை மட்டும் காரணமல்ல என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். கார்ல் மார்க்ஸின் பொருளாதாரப் பங்களிப்புக்காக அல்ல; அவர் ஓர் அரசியல் ஆய்வாளர் என்பதால் அல்ல; நவீன சமூக அறிவியலின் தந்தை என்பதால் அல்ல. ‘கார்ல் மார்க்ஸ் மனித குலம் முழுமைக்கும் சேர்த்து சிந்தித்தவர்.’
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து கால் நூற்றாண்டுக்குப் பிறகு அந்நூலில் ஆசிரியர்கள் 1872ல் அதன் ஜெர்மன் பதிப்புக்காக முன்னுரையில் இப்படி எழுதினார்கள்.‘கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியனாவையே.’ இன்றும்கூட இந்த வார்த்தைகள் பொருந்தும்.
எதிர்கால நம்பிக்கையுடனும் பெருமிதமான வார்த்தைகளுடனும் இந்த அறிக்கை முடிவடைகிறது. ‘பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கோ அனைத்து உலகமும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’

Monday, May 27, 2013

மனிதனாய் வாழ உலகைப் படி.....

அறிவைத் தேடி
ஆழமாய் படி

இன்மாய் வாழ
இளமையில் படி

இருக்கின்ற வரை
இயன்றவரை படி

இல்லாதோருக்கு
உதவிட படி

ஈன்றவர்களின் பெருமையைக்
காத்திட படி

தெரியாதோருக்கு
தெளிவுபடுத்திட படி

இயலாமையிலும்
கொடுத்து உதவிட படி

ஒற்றுமையாய் வாழ
அமைதியைப் படி

உழைப்பைச் சுரண்டும்
ஆதிக்கத்தைப் படி
உண்மையா, வேதமா?
உணர்ந்து படி

கண்ணுக்குத் தெரிந்த
உண்மைகளைப் படி

காட்டில் வாழும்
உயிர்களைப் படி

மொழியைக் காக்க
தெளிவாய்ப் படி

மண்ணைக் காக்க
மாண்புடன் படி

இனத்தைக் காக்க
வீரத்தைப் படி

மனிதனாய் வாழ
உலகைப் படி

Sunday, May 26, 2013

நம்மால் முடியும்...! (படிப்பினைக் கதை)


ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு


" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.

மனதைப் புரிந்து கொள்

ஒரு பெரியவரிடம் அய்யா..! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.

“என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்..

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரியவர்..

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”


“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது? ”என்றான் அவன்.

"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -

“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது. அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம்.

தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம்.

தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” -

என்று அவர் கதையை முடித்தார்.

இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

நீதி : "அனைத்துக்கும் நம் மனமே காரணம்..."

Wednesday, April 17, 2013

நண்பனுடன்
அவனது
வீட்டிற்குச்சென்றிருந்தேன்..

வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
கிடந்தார்..

நண்பன் உள்ளே 
போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி
நல்லா
இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா
அத அப்புடியே திரும்ப பேசும்..

பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
சென்றேன்..

எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில் வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த
பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

நண்பனைப்பார்த்தேன்..

யாருடனோ (!)
ரகசியமாய்ப்
பேசிக்கொண்டு
இருந்தான்..

நா சாப்ட்டேன் செல்லம்..
நீ செல்லம்..?

சரிடி..
நா வீட்ல இருக்கேன்டி..
அப்புறமா பேசுறேன்டி..
அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்..

ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து
சைக்கிள் மிதிக்கிறார்..
ஒரு அப்பா குடும்பத்துக்காகவே
மீன் கூடையை
சைக்கிளில் சுமக்கிறார்.

ஒரு அப்பா மன உளைச்சலை
வெளியே விட்டு
சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார்.

ஒரு அப்பா தீபாவளி முன்னிரவில்
கடன் கேட்டு வீதியில் அலைகிறார்.

ஒரு அப்பா கவலை மறைத்து
குழந்தைகளுடன் மத்தாப்பு கொளுத்துகிறார்.

ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள்
குடும்பத்தை அனுப்பிவிட்டு
தள்ளு வண்டி காரனிடம்
டவல் வாங்குகிறார்.

ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து
தெரு சுற்றி காலம் கடந்து
பசியோடு வீடு வருகிறார்.

பாவம் அப்பாக்கள்.
அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்..................................

Wednesday, April 10, 2013

யோக சித்தி வரங் கேட்டல்

தேடிச் சோறுநிதந் தின்று — பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் 
வாடித் துன்பமிக உழன்று — பிறர் 
வாடப் பலசெயல்கள் செய்து — நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் 
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல 
வேடிக்கை மனிதரைப் போலே — நான் 
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

Thursday, April 4, 2013

இறந்த பின்‍‍ ‍ சிறுகதை

நண்பர் பகிர்ந்தது.......

”கார்த்தி, அந்த அரதப் பழசான சைக்கிளை புது வீட்டிலேயும் கொண்டு வந்து வைக்கனும்னு அடம் பிடிக்கிறாருடா உன் அப்பா”

அம்மா குறிப்பிடும் மிதிவண்டி என் அப்பா வழி தாத்தாவின் உடையது. அந்த தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆனாலும், அப்பா அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாய் பராமரித்து வருகின்றார். ஒன்றிற்கு இரண்டு கார்கள், மூன்று மோட்டார் பைக்குகள் என வீட்டில் இருந்தாலும் அந்த சைக்கிளும் அவற்றிற்கு இணையாக வாசலில் நிற்கும்.

“பழைய பேரீச்சம்பழம், ஈயம் பித்தாள” என தெருவில் குரல் கேட்கும்பொழுதெல்லாம் அப்பாவைத் தவிர அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிப்போம்.

அந்த அசட்டையான நமுட்டு சிரிப்புகளை ஐந்தாறு வருடங்கள் கழித்து இன்னும் எட்டு மணி நேரத்தில் மீண்டும் அனுபவிக்கப் போகின்றேன். பிராங்பர்டில் விமானம் ஏறியாகிவிட்டது.  அருகில் ஓர் அமெரிக்கன். கையில் ஒருப் புத்தகம். வளைந்து நெளிந்து புத்தகத்தின் பெயரை ஒரு வழியாகப் பார்த்துவிட்டேன்.  "Energy of life" என எழுதி இருந்தது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. நாசாவின் இலச்சினை ஓர் ஓரத்தில் இருந்தது.

விமானம் வானில் நிலைபெற்ற பின்னர், அரைவாசிப் புன்னகையைக் கொடுத்ததற்கு முழுப்புன்னகையையும் கொடுத்தார்.

தன்னை “தனடோஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

”நாசா,  வாழ்வியல் மேலாண்மையைப் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கின்றதா?” எனக் கேட்டேன்.

மென்மையாய் சிரித்துவிட்டு, சன்னமான குரலில், “அதிரகசியமான ஆய்வைப் பற்றியப் புத்தகம் இது, இந்த விமானம் சென்னை போய் சேர்ந்துவிட்டால், அந்த ஆராய்ச்சியின் கடைசிப் பரிசோதனையும் வெற்றி “ என்றார்.

”அப்படி என்ன வகையான ஆராய்ச்சி” என்றேன். 

”நாம் அனைவரும் இறந்த பின், அந்த ஆற்றல் எங்கேப் போகின்றது ?”  என்ற அவரின் கேள்வி  வடிவேலுவின் ”மூனைத் தொட்டது யாரு” நகைச்சுவை நினைவுக்கு வந்தது. இன்னும் எட்டு மணி நேரம் பொழுது போகவேண்டுமே, பேச்சுக் கொடுத்தேன்.

“நம்பிக்கையாளராக இருந்தால், சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகும்,  பகுத்தறிவாளராக இருந்தால், இயற்கையோடு கலந்துவிடும்”

”நான் ஒரு விஞ்ஞானி, ஆக இயற்கையோடு கலந்துவிடுகிறது என எடுத்துக் கொள்வோம். அப்படி இருக்கையில் அந்த ஆற்றலை வழிமறித்து நமக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும் தானே”

”புரியவில்லையே”  சிரிக்காமல் சுவாரசியமாகக் கேட்டேன்.

“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்ற முடியும் இது அடிப்படை விதி, ஆக, இறந்த ஆன்மாவை பிடித்து ஏன் வேறுவகை ஆற்றலாக மாற்றி பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்பதான ஆராய்ச்சி அது”

உண்மையோ பொய்யோ , இந்த வகையான விசயங்களை எனக்கு கேட்கப் பிடிக்கும்.

“வல்லரசுகள் ஏன் போர்களில் ஈடுபடுகின்றன?”

”கனிம, எண்ணெய் வளத்திற்காக?”

”ஆம், அவற்றுடன், போரினால் அழியும் ஏகப்பட்ட உயிராற்றல்களுக்காகவும்”


புதுவகையான கான்ஸ்பிரைஸி தியரியாக இருந்தது.


“இப்பொழுதெல்லாம், போர்களில் வல்லரசுகள், புதுவகையான குண்டுகளைப் பயன்படுத்துகின்றன, அந்தக் குண்டு உடலில் பாயும்பொழுது, குண்டில் உயிராற்றல் சேகரிக்கப்பட்டுவிடும்”

நான் பதில் பேசவில்லை.

”பின்னர் அந்த ஆற்றலை, எரி சக்தியாகவோ, மின்னாற்றலாகவோ மாற்றிவிடுவோம்”

“எவ்வளவு நாட்களுக்கு ஓர் உயிராற்றல் வரும்”

“நல்ல கேள்வி, ஓர் இயந்திரத்திற்கு உயிராற்றலை ஆற்றல் மூலமாக கொடுத்துவிட்டால், முடிவிலா காலம் வரை அந்த இயந்திரம் தொடர்ந்து இயங்க, அந்த ஆற்றல் போதுமானது.  இந்த விமானம் கூட சோதனை ஓட்டமாக ஓர் ஆன்மாவின் ஆற்றலால் தான் முதன் முறையாக இயக்கப்படுகின்றது”

மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லேலூயா ஹரே கிருஷ்ணா அளவிற்கு பில்ட் அப் கொடுக்கின்றாரே என நினைத்துக் கொண்டேன்.

“யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு வல்லரசு ரகசியத்தை உன்னிடம் சொல்கின்றேன் , கவனமாகக் கேட்டுக்கொள்,  அடுத்தப் பத்து வருடங்களில், உலகத்தின் மக்கள் தொகையில் பாதி திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும், மக்களின் உயிர்கள் எல்லாம் எந்திரங்களுக்கு உயிராற்றல் மூலங்களாக மாற்றப்பட்டுவிடும்”

“ஏன் விலங்குகளின் உயிராற்றலை எடுத்துக் கொள்ளக்கூடாதா, எதற்கு சாமானிய மனிதர்களைக் கொல்ல வேண்டும்” எனக்குள் இருந்த மனிதாபிமானி விழித்துக் கொண்டான்.

“நல்ல கேள்வி, இயற்கைக்கு ஒவ்வாத ஓர் உயிரினம் எதுவென்றால், மனித இனம் மட்டுமே, மனித இனம் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும், இயற்கையின் சமனிலை பாதிக்கப்படாது...அதனால் தான் மனித உயிர்களை நாங்கள் எடுக்க முடிவு செய்தோம்”

அதன் பின்னர் நான் ஒன்றும் பேசவில்லை. சாப்பாடு வந்தது, சாப்பிட்டேன். அதன் பின்னர் அவரை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. கதைக் கேட்க சுவாரசியமாகவும் திகிலாகவும் இருந்தாலும் அது எல்லாம் சாத்தியப்படுமா எனக்கு நான் கேட்டுக்கொண்ட கேள்விக்கு , சாத்தியமில்லை என மனசாட்சி சொன்னது.கட்டுக்கதைகளைப் பரப்பிவிடும் கோஷ்டியைச் சேர்ந்தவராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
அவ்வப்பொழுது ஓரக்கண்ணால் பார்த்தபடி இருந்தார். சென்னை விமான நிலையத்தில் விமான தரை இறங்கியது.  விமானத்தை விட்டு வெளியேப்போகையில் தனடோஸ், விமானிகளிடம் இறுக்கமாக கைகளைக் குலுக்கி வெளியேறினார்.

--
எனது வீட்டின் புதுமனைப் புகுவிழா விற்கு வந்து இருந்த அனைவரும் கேட்டது, திருஷ்டிக்காக அந்த பழையை சைக்கிளை வைத்து இருக்கிறீர்களா என்பதுதான்.  அன்று மாலை அப்பாவிடம் அந்த சைக்கிளை யாரிடமாவது கொடுத்துவிடலாம எனக்கேட்டேன்.

“குன்றத்தூர் போகலாமா, வடபழனி போகலாமா” எனக்கேட்டார்.

“வடபழனி” என கார் சாவியை எடுத்தேன்.

“இல்லை சைக்கிளில் போகலாம் வா” எனக்கூப்பிட்டார்.

அந்த சைக்கிளில் தாத்தா இறப்பதற்கு அவருடன் கொரடாச்சேரி கிராமத் தெருக்களில் சுற்று போக சிறுவனாக இருக்கும்பொழுது ஏறியது. அதன் பின்னர் இன்றுதான் ஏறுகின்றேன்.

ஆற்காடு சாலை போக்குவரத்து நெரிசலில், என்னை பின்புறம் வைத்து சைக்கிளை எந்த சிரமமும் இன்றி அப்பா ஓட்டிக்கொண்டு வந்தார். சைக்கிளில் ஒரு மிதிக்கு கிட்டத்தட்ட நூறு மீட்டர்கள் தூரம் சர்வசாதாரணமாக ஓடியது.

“கார்த்தி, இந்த சைக்கிள் எனக்கு ஏன் முக்கியம் தெரியுமா, இந்த சைக்கிளுக்குள்ள என் அப்பாவோட உயிர் இருக்குன்னு நினைக்கிறேன், இப்போகூட நான் பெடல் பண்ணல, அவரே ஓட்டுறாருதான்னு எனக்கு ஒரு நம்பிக்கை, அவரோட ஆன்மா, இந்த சைக்கிளுக்குள்ள இருக்கு ... அந்த நம்பிக்கைக்காத்தான் இந்த சைக்கிள் வச்சிருக்கேன், உன் அம்மாவுக்குப் புரியாது, நீயாவது புரிஞ்சுக்கோ”

அப்பா சொன்ன  தாத்தா செண்டிமெண்ட் கதைக்குப் பின்னர் , அதில் இருந்த உணர்வுப் பூர்வ இழையையும் தாண்டி,  தனடோஸ் சொன்னது உண்மையாக இருக்குமோ என நம்பத் தொடங்கினேன்.

நான் மட்டும், ஏன் இப்படி?


கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் “ஒய் மீ?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது. “சரி…. இது என்ன புத்தக விமர்சனமா?’ என்ற கேள்வி உங்கள் கண்களில் எழுவது தெரிகிறது. விமர்சனம் இல்லை. வித்தியாசம். கிருஷ்ணாவுக்கு “ஆட்டிசம்’.
“ஆட்டிசம்’ என்ற சொல்லுக்கு “மன இறுக்கம்’ என்று தமிழாக்கியுள்ளார்கள். “மதியிறுக்கம்’ என்றும் கூறுகிறார்கள்.
ஆட்டிசத்தின் பாதிப்பு ஒருவரைத் தன்னுள்ளே அமிழ்ந்து போகவைக்கும், வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவிடாது, நம் சிரிப்புக்குப் பதில் சிரிப்பு வராது. நம் பார்வைக்கு எதிர்பார்வை இராது, நம் கேள்விக்கு விடை கூற விடாது, திரும்பத் திரும்ப சில செயலைச் செய்யத் தூண்டும், அதீதமான மன இறுக்கம் இருக்கும்.
நமக்கும் வெளி உலகத்துக்கும் இருக்கும் தொடர்பை ஒரு சுவர் தடுத்தால் எப்படி இருக்கும்? அதுபோல என்று சொல்லலாம். புரிதல், உள்வாங்கிக் கொள்ளுதல் நடைபெறும். ஆனால் புரிந்தது என்று வெளி உலகத்திற்குத் தெரியாது.
புரியாமலா இந்தப் புத்தகத்தை கிருஷ்ணா எழுதினார்? உபநிஷத்துகள், தத்துவ நூல்கள் எல்லாவற்றையும் படித்த பின்னர்தான் இந்தப் புத்தகம் வடிவு பெற்றுள்ளது. சுகம் என்பது என்ன, துக்கம் என்ன, மகிழ்ச்சிக்குப் பிறப்பிடம் எது, துயரத்துக்குக் காரணம் எது என்ற ஆழமான தத்துவங்களை எளிதாக விளக்குகிறது.
“ஆட்டிசம்’ என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்கிறார்கள். குறை என்பது என்ன? யாருடைய பார்வைக் குறை என்று எடை போடுவது? நாமே ஓர் அழுத்தமான சதுரத்தை வரைகிறோம். அதில் அடைபடாதவர்களை, குறைபாடுடையவர்கள் என்று ஒதுக்குகிறோம்.
இதனால் “ஆட்டிசம்’ உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குறைந்தவர்கள், மனநலிவுள்ளவர்கள், “டவுன்’ஸ் சின்ட்ரோம்’ உள்ளவர்கள், “செரிப்ரல் பால்ஸி’ உள்ளவர்கள் இப்படி எத்தனையோ பேர், செவ்வகங்கள், வட்டங்கள், முக்கோணங்கள் – நம்முடைய சதுரத்துக்குள் பொருந்துவதில்லை. இதனாலேயே வெளி உலகத்தின் பார்வைக்கு வெளியே வாழ்கிறார்கள்.
வட்டங்களின் பார்வையால் பார்த்தால், சதுரம் வித்தியாசமே. “”உருண்டையாக இல்லாமல் நாலு மூலைகள் கொண்ட குறைபாடு உடைய வடிவம்” என்று வட்டம் சொல்லலாமே! அப்பொழுது சதுரங்கள் குறைபாடு உடையனவா?
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்தது. உயர் நீதிமன்றத்தின் நூலகத்தின் நூலகர் பதவிக்குப் பலர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் ஒருவருக்கு ஒரு கால் சற்று வித்தியாசமாக இருக்கும், நடப்பது எளிதல்ல. அவரை “ஊனம்’ என்று சொல்லி தேர்வுக்குழு தள்ளிவிட்டது.
அவர் “பேராண்மை மனு’ தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் கூறியது என்னவென்றால், “அவருக்கு ஊனம் என்று ஒதுக்கிய நம் மனங்களில்தான் ஊனம்; அவர் முற்றிலும் தகுதியுள்ளவர்’ என்பதுதான். அவர் வெற்றி பெற்றார். இது வட்டங்களின் பிழையன்று, முக்கோணங்களின் பிழையன்று, செவ்வகங்களின் பிழையன்று, இது நாமாகிய “சதுரங்களின்’ பிழையே.
மனிதநேயத்தின் அடையாளமே அனைத்து வித்தியாசங்களையும் உள்ளடக்கி சமமாகப் பார்ப்பதுதான். இதுவே ஜனநாயகத்தின் அடையாளமும் ஆகும். ஜனநாயகத்தில் அனைவரும் சமம், அனைவருக்குமானது ஜனநாயகம்.
ஜாவேத் அபிதி என்பவர் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக உழைப்பவர். எங்கும் சக்கர நாற்காலியில்தான் செல்வார். அவர் கூறுவார் “”நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் நாட்டு மக்கள் அனைவரின் திறமையும், அறிவுத்திறனும் ஒன்றாகத் திரண்டு செயல்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளைச் செயலற்ற கற்களாக இருக்க விட்டோமானால் நம் நாடு அந்தப் பயனில்லாத பாரங்களையும் அல்லவா இழுக்க வேண்டும்?” என்று.
மாறாக அவர்கள் ஒவ்வொருவரையும் சுதந்திரமாகப் பிறரைச் சாராது செயல்படும் மனிதர்களாக உருவாக்க நம் அரசமைப்புகளும் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும்.
அன்று அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், ஆட்டிசமுள்ள பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். விஷால் என்ற சிறுவன் “ஆடிஸ்டிக் சாவந்த்’ என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் “ஆட்டிசமுடையவர் – அறிவாளியும்கூட’. அதாவது ஒரு குறிப்பிட்ட கலையோ, திறமையோ அவர்களுக்கு எல்லோரையும்விட மிகக்கூடுதலாக இருக்கும்.
விஷாலுடைய தாயார், தன் மகன் எழுதிய புத்தகத்தை என்னிடம் பெருமையுடன் காட்டினார். முத்துமுத்தான கையெழுத்து. படிக்காமலே விஷாலுக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரியுமாம். எட்டு வயதுக்கு அப்பாற்பட்ட விஞ்ஞான அறிவு, ஏன் எண்பது வயதுக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான அறிவு, விஷாலைப் போன்றவர்களைக் குறைபாடு உடையவர்கள் என்று எப்படி அழைக்க முடியும்? ஆனால், அவர்கள் நிச்சயமாக வித்தியாசமானவர்கள்.
ஐஸ்வர்யாவை அங்கு சந்தித்தேன். ஐஸ்வர்யாவுக்கு “ஜிக்சா பசில்கள்’ (குறுக்கெழுத்துப் புதிர்கள்) எவ்வளவு கடினமாக இருந்தாலும், அலட்சியமாக பூர்த்தி செய்ய முடியும். யோசிக்கக்கூட வேண்டாமாம், அவள் மூளையில் அந்த சிறுசிறு துண்டுகளை எப்படி இணைத்துப் படத்தை அமைக்க வேண்டும் என்று அப்படியே உதிக்குமாம். ஐஸ்வர்யாவின் பெற்றோர் சொல்கிறார்கள், “”ஐஸ்வர்யாவுக்குக் கடினமான புதிரெல்லாம்… பூ, ஆனால் ஐஸ்வர்யாவே ஒரு புதிர்” என்று.
“அய்ஷிஸ் பசில்ஸ்’ என்ற இணையதளத்துக்குச் சென்று பாருங்கள். ஐஸ்வர்யாவின் திறமை நம்மை வியக்க வைக்கிறது. இந்தத் திறமைசாலியான, அதீத அறிவுள்ள, அன்பான, அழகான ஐஸ்வர்யாவைச் சுற்றியும் ஆட்டிச சுவர் உள்ளது.
அன்று தன்னுடைய புத்தகத்தின் வெளியீட்டு விழா என்று கிருஷ்ணாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் ஆட்டிசத்தின் மன இறுக்கத்தின் காரணமாக அமைதியாக உட்கார முடியவில்லை. இருபுறமும் கிருஷ்ணாவின் பெற்றோர் கிருஷ்ணாவைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விஷாலுடைய தாயார் என்னிடம் சொன்னார் “”அவனைத் தடவிக் கொடுத்தால் மிக அழகாக எழுதுவான்” என்று. அந்த அன்பான ஸ்பரிசம் ஆட்டிசத்தின் இறுக்கத்தைத் தளரச் செய்து அமைதிப்படுத்தும்போல் தெரிகிறது. பல பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியின்பொழுது தங்களுடைய குழந்தைகளைத் தடவிக் கொடுப்பதைப் பார்த்தேன்.
வந்தவர்கள் எல்லோரும் பளிச்சென்று உடையணிந்து அழகாக இருந்தார்கள். அவர்கள் சதுரங்களில்லை, உண்மைதான். ஆனால், அவர்களுக்கும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் ஆசை இருக்கும். அது அவர்கள் உரிமையும்கூட. வாழுவது என்பது வெறுமனே மூச்சுவிடுவது மட்டுமல்ல, அது “முழுமையாக வாழ்வது’ என்று நமது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன.
நம் அரசியல் சாசனத்தின் “21-ஆவது பிரிவு – வாழும் உரிமை’ என்பதை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உரிமையைப்பெற அரசு எல்லா உதவியும் செய்ய வேண்டும். அது சமூகத்தின் பொறுப்பும்கூட. ஆனால் இந்த உரிமை சதுரமல்லாதவர்களுக்குக் கிடைக்கப் பல தடைகள் உள்ளன. நம் கண்களில் அவர்கள் புலப்படுவதில்லை, மாறானவர்களை நம்முலகத்தில் இருப்பவர்களாகவே நாம் நினைப்பதில்லை.
அங்கு ஒரு தாயார் என்னிடம் சொன்னார் “”எங்களைப் பற்றியும் எழுதுங்கள்” என்று. இதோ எழுதுகிறேன். இந்த வித்தியாசமான குழந்தைகளின் பெற்றோருடைய வாழ்க்கையும் வித்தியாசமானதுதான்; “”எல்லோரையும்போல” என்ற சொற்கள் அவர்கள் அகராதியில் இல்லை.
ஆட்டிசம் உள்ள 15 வயது பிள்ளையின் தந்தை சொன்னார். “”ஒரு நாள் என் குழந்தை எனக்கு ஜுரம் என்றான். அன்று நாங்களிருவரும் அப்படி மகிழ்ந்தோம்” என்று, நான் தடுமாறிப் போனேன். ஜுரம் என்று குழந்தை சொன்னால் சந்தோஷமா? இல்லை, அதற்கில்லை. வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள விடாத மன இறுக்கச் சுவரில் ஒரு சிறு விரிசல், ஒரு துளி வெளிச்சம். அந்த வெளிச்சம் தெரிந்ததால் கூத்தாடுகிறார்கள் தந்தையும் தாயும்.
ஆட்டிசத்தின் தாக்கம் 1-2 வயதில்தான் தெரியும் என்கிறார்கள். அதன் பின் அந்தப் பெற்றோர்களின் வாழ்க்கை வேறு தடத்தில், வேறு தளத்தில் செல்லும். அவர்களும் கிருஷ்ணா கேட்ட கேள்வியை இறைவனிடம் கேட்பார்கள். “ஒய் மீ’ என்று. “”எனக்கு ஏன் இப்படி…?” பிறகு நம்மால் ஒரு வித்தியாசமான குழந்தையை வளர்க்க முடியுமா? என்ற சந்தேகத்துடன் அந்தப் பயணம் தொடங்கும். எங்களால் முடியும் என்கிற மனத்துணிவுடன் எல்லாம் என் குழந்தைதான் என்ற பாதையில் உறுதியுடன் நடக்கிறார்கள்.
அயராது முயற்சி செய்த பின் கிருஷ்ணா ஒரு நாள், “ஆப்பிள்’ என்று சொன்னது ஒரு சாதனை மைல்கல். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தும் கிருஷ்ணாவுக்கு தாயார் படித்துக் காண்பித்தார்கள், கிருஷ்ணாவிடம் எதிரொலி எதிர்பார்க்காமல். பிரமிக்க வைக்கிறார்கள் அங்கு வந்த பெற்றோர்கள். அவர்களிடம் நான் கண்டது அசாத்திய உறுதி, உற்சாகம், மனோதிடம், ஆக்கப்பூர்வமான வீர்யம்.
கிருஷ்ணாவின் தாயார் “ஃப்ரம் எ மதர்ஸ் ஹார்ட்’ என்ற புத்தகத்தில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் போன்ற பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்று.
இந்தத் தளராத முயற்சி எல்லோருக்கும் வருமா என்று எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தபோது மூச்சை அடைத்தது. ஆனால், அன்று நான் சந்தித்த பெற்றோர் எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள்.
ஆண்ட்ரூ சாலமன் என்பவர் “ஃபார் ஃபிரம் த ட்ரீ’ என்ற புத்தகத்தில் வித்தியாசமான குழந்தைகளைப் பற்றியும் பெற்றோரைப் பற்றியும் எழுதியுள்ளார். அவர் சொல்கிறார், இந்த வித்தியாசம் நிகழும் சில குடும்பங்களில் நெருக்கமான அன்பால் பிணைகின்றனர். சிலர் தம்மைப் போன்ற அனுபவமுடையவர்களுடன் சேர்ந்து ஒருவரையொருவர் தாங்குகிறார்கள். சிலர் தாங்களே “ஆர்வலர்கள்’ ஆக மாறி தன்னார்வ அமைப்புகள் நடத்துகிறார்கள். உலகத்தோருக்கு தங்கள் நிலைமை, தங்கள் உரிமைகளை, எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ள உழைக்கிறார்கள், போரிடுகிறார்கள். புரிதல் என்பது முதல்படி, பிறகு மற்றதெல்லாம் வரும்.
குவாங்க் என்று ஒரு மலேசியப் படம். 14 நிமிடம்தான். இணையதளத்தில் பார்க்கலாம். குவாங்க் என்பவருக்கு ஆட்டிசம். அவருடைய சகோதரர்தான் படத்தின் இயக்குநர். அவர் இப்படத்தை தன் சகோதரருக்கும் உலகில் உள்ள எல்லா ஆட்டிசம் உள்ளவர்களுக்கும் அர்ப்பணம் செய்துள்ளார்.
அந்த இரு சகோதரர்களைப் பற்றிதான் படம். இருவரும் அவரவர்களாகவே நடிக்கிறார்கள். குவாங்கிற்கு ஒலியும் இசையும் உயிர். அவர் செவிகளில் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களின் அலைவரிசையும் (நாம் ஆறு கட்டை ஐந்து கட்டை என்று சொல்கிறோம் இல்லையா, அது) துல்லியமாகக் கேட்கும். ஒரு கண்ணாடிக் கோப்பையில் தட்டினால் “பி’ நோட்டு கேட்க வேண்டும். அந்தக் கோப்பையைத் தேடுகிறார் குவாங்க்.
அண்ணாவோ அரும்பாடுபட்டு ஒரு வேலைக்கு சிபாரிசு செய்து அவரை அங்கு அனுப்புகிறார். போகும் வழியில் ஒரு பெண்மணி ஒரு சாக்குமூட்டையை இழுத்துச்சென்று குப்பையில் போடுகிறார். அந்த மூட்டையில் ஒரு பொருள் அப்படி இழுக்கும்பொழுது “பி’ நோட்டை ஒலிக்கிறது. அவ்வளவுதான் நேர்காணல் காற்றோடு போகும். அந்த மூட்டையைத் தோண்டி துழாவி அந்தக் கோப்பையை பொக்கிஷம்போல எடுப்பார். முகத்தில் அப்படி ஒரு பரவசம், ‘பி’ “பி’ என்று கூவிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்.
அண்ணாவுக்குக் கோபம் கனல் தெறிக்கும். “அறிவு கெட்டவனே’, “தண்டச்சோறு’ எல்லாம் பிரவாகமாக வரும். குவாங்கிற்கு ஒன்றுமே கேட்காது. ம் ஹும். தன்னறைக்குச் செல்வார். அப்புறம் வெளிவரும் ஒரு தெய்வீக நாதம். அண்ணாவின் முகம் இளகும். உதடுகள் துடிக்கும். நமக்கும்தான். நம் மனதில் வலியும் உவகையும் சேர்ந்து பொங்கும்.
சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையில்லாமல் தன் கருமமே கண்ணாக இருப்பவரை “ஏகாக்ர’ சித்தன் என்கிறோம். அப்பொழுது “ஆட்டிசம்’ உள்ளவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களா? மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலையில் உள்ளவர்களா? அப்படியும் ஓர் ஆராய்ச்சிக்குழு கூறுகிறதாம்.
அவ்வளவு தொலைவுக்கு நாம் செல்வானேன்? எல்லா குழந்தைகளுக்கும் என்ன மனித உரிமைகளுண்டோ அது இவர்களுக்கும் வேண்டும். அது கிடைத்தால் போதும். ஐஸ்வர்யா, விஷால், கிருஷ்ணா போன்றோரைப் பார்த்தால் நமக்கு ஒன்று புரிகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அது வெளிவர வேண்டும்.
ஆட்டிசம் உள்ளவர்களும் பள்ளிக்கூடம் செல்ல, வேலைக்குச் செல்ல, பொது இடங்களுக்குச் செல்ல மற்றும் வாழ்க்கை என்னவெல்லாம் நமக்குக் கொடுக்கிறதோ அவை அனைத்தையும் அவர்களும் பெற வேண்டும். பெற்றோருக்கு நமக்குப்பின் என்ற கேள்வி உலுக்கும். அந்தக் கேள்விக்கு சமூகம் விடைபகர வேண்டும்.
இவர்களுக்காக “தேசிய அறக்கட்டளைச் சட்டம்’ என்ற சட்டம் உள்ளது. அது நன்றாகச் செயல்பட வேண்டும். அதைப்பற்றி நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலைநாடுகளில் வித்தியாசமான குழந்தைகளுக்குப் பலவிதமான ஆதரவு அமைப்புகள் உள்ளன.
ஆட்டிசத்தின் தாக்கம் ஒரே மாதிரி இல்லை என்று இந்தத் துறையின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது வெவ்வேறு மாதிரி வெளிப்படுகிறது. அதன் தீவிரமும் ஒன்றேபோல இல்லை. சிலருக்கு லேசான தாக்கம் இருக்கும். சிலருக்குக் கூடுதலாக இருக்கும். அவரவர்கள் திறமைக்கேற்ப வசதிகள் மேலைநாடுகளில் உள்ளன.
சிலர் பஸ்ஸில் வேலைக்குச் சென்று வருகிறார்கள். வீட்டில்கூட நிறைய வேலைகள் செய்ய முடியும். அவர்களுக்கு ஒரே சீரான பணிநிரல் முக்கியம். ஒரே சீராக இருக்காவிட்டால் இறுக்கம் கூடும். மேலைநாடுகளிலிருக்கும் வசதிகளைப் பார்க்கும்பொழுது சிறிது சிறிதாகவேனும் நம் நாட்டிலும் அதுபோல வரவேண்டும் என்று தோன்றும்.
ஆட்டிசம் பற்றி எல்லோரும் அறிந்துகொள்ளுவதற்கு அரசும் மருத்துவமனைகளும் சமூக அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோர்கள் காலதாமதமில்லாமல், ஆட்டிசமுள்ள குழந்தைகளுக்கு என்னவெல்லாம் உதவி, உந்துதல் கொடுக்க முடியுமோ அது நடக்கும்.
மருத்துவரீதியாக நான் ஆட்டிசத்தைப் பற்றி எழுதவில்லை. மனிதநேயரீதியாகச் சொல்கிறேன். நம் பார்வைக்குள், “யாவரும் கேளிர்’ என்று அனைவரையும் அடைக்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சிறு கற்களைச் சேர்த்து பாலங்களை அமைக்கலாம். வித்தியாசங்களின் பூங்கொத்து தானே ஓர் ஆரோக்கியமான சமுதாயம். அதில் யாரும் “”நான் மட்டும்… ஏன்” என்று ஏங்கக்கூடாது!
- நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்


வாழ்வே ஒரு போராட்டம்


துறவி ஒருவர் தன் சீடர்களுக்கு “வாழ்க்கை என்றால் என்ன?” என்பதை தெளிவாக சொல்லிக் கொடுக்க, சீடர்களை அழைத்தார். அப்போது அவர்களிடம் உதாரணத்திற்கு ஒரு பட்டாம்பூச்சி இந்த உலகை காண்பதற்கு முன் எவ்வாறு கஷ்டப்பட்டு வருகிறது என்ற ஒரு விஷயத்தை அவர்களுக்கு காண்பிக்க இருந்தார்.
அதனால் அவர்களிடம் பட்டாம்பூச்சியின் கூட்டினை காண்பித்து, இன்னும் சில நேரங்களில் இந்த பூச்சி நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியே வந்துவிடும் என்றும் அதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் கூறி மடாலயத்திற்குள் சென்று விட்டார்.
அதைப் பார்த்த ஒரு சீடன், அது ஓட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லோசாக உடைத்துவிட்டான். ஆனால் அந்த பட்டாம் பூச்சி வெளியே வந்து இறந்துவிடுகிறது. இதனால் அவன் அந்த பட்டாம் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகிவிட்டான்.பின் துறவி வந்தார். ஊட்டை உடைத்த மாணவன் அழுதுக் கொண்டிருந்தான். எதற்கு அழுகிறாய் என்று பேட்ட போது, நடந்ததை சொன்னான்.
பின் குரு அவனிடம் பட்டாம்பூச்சி அத்தகைய போராட்டத்தை அனுபவிக்கக் காரணம், அதன் சிறகுகள் நன்கு வளர்வதற்கும், தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும் தான் காரணம் என்று சொன்னார்.
அதேப்போல் தான், நாமும் நமது வாழ்வில் இன்பமாக வாழ பல போராட்டங்களை சந்திக்க நேரிடும், அதற்காக மனமுடைந்துவிடக் கூடாது. போராட்டங்களை சந்திக்க சந்திக்கத் தான் நமது மனமும் வலுவடையும். பின் எதற்கும் துணிச்சலோடு போராடி, வாழ்வில் முன்னேறலாம் என்று கூறி, அவர்களுக்கு ஒரு நல்ல அறிவைப் புகுட்டினார்.

பலம் எது? பலவீனம் எது?


ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன.அனைத்து விலங்குகளும்ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும்எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டேஇருந்தது.
உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது.
அப்போது பாட ஆரம்பித்தமயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது.
மயில் தனது வருத்தத்தை மைனாவிடம்கூற,மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,அதை நினைத்து நீ சந்தோஷபட்டிருக்கிறாயா என்றது, மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லைஎன்று பதில் கூறியது.
இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்னஎன்பதைஉணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டுமே அன்றிஎது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது. தன் தவறைஉணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.
நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டுமென்பதே இக்கதையின் நீதியாகும்.